திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர். கே. பேட்டை தாலுக்கா இஸ்லாம் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (37). இவரது மகள் பவித்ரா (14) இவர் ஆர். கே. பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மயக்கம் மற்றும் வாந்தி வருவதாக தந்தை அரிகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆர். கே. பேட்டை புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அப்போது பவித்ராவுக்கு ரத்தக் குறைவு இருப்பதாக கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பவித்ரா தனக்கு தலைவலி இருப்பதாகவும், இதனால் தாத்தாவிடம் சிறிது நேரம் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பவித்ரா வாந்தி எடுத்து கண்கள் மேல்நோக்கிச் சென்று விட்டதால் அதிர்ச்சி அடைந்து மகளை உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
ஆனால் தொடர் சிகிச்சையில் இருந்த மகள் பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரிகிருஷ்ணன் ஆர். கே. பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.