தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி வடக்கு கிராமத்தில், வேளாண் மாணவர்கள் பணி அனுபவ களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும், இறுதி ஆண்டு மாணவர்கள் செருவாவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி குறித்தும் மற்றும் பூச்சி மேலாண்மையில் நீல ஒட்டும் பொறியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தங்கள் பேராசிரியர்கள் செல்வ அன்பரசு (மண் அறிவியல் துறை) மற்றும் அண்ணாசாமி (தோட்டக்கலைத் துறை) ஆகியோரின் ஆலோசனையுடன்,
இறுதி ஆண்டு மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் ஆகியோர்
விவசாயிகளுடன் கலந்து உரையாடினர்.
அப்போது வேளாண் மாணவர்கள் விவசாயிகளிடம் கூறுகையில், "நீல நிற ஒட்டும் பொறி இலைப்பேன், முட்டைக்கோசு ஈ, வெள்ளை நிற ஒட்டும் பொறி மற்றும் ஆரஞ்சு நிற ஒட்டும் பொறி தத்துப் பூச்சிகள், பச்சை நிற ஒட்டுப் பொறி பழ ஈ, பருத்திக்காய் கூண் வண்டு ஆகிய பூச்சிகளை பிடித்துக் கொள்ளும். காய்கறி தோட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டு பொறிகளை பொருத்தினால், பூச்சிகள் அதில் எளிதாக சிக்கிவிடும். இதனால் காய்கறிப் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், நோய் தாக்காமல் இருக்கும்" என்றனர்.