சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியில், மத்திய அரசின் நிதி வழங்காமை காரணமாக 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படுவதை கண்டித்து, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனை எதிர்த்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பின் பேரில், அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில், சிவகங்கை நகர மன்ற தலைவர் துரை ஆனந்த் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 12 ஒன்றியங்களிலும் 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறும் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.