சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவிற்காக கடந்த 11-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக இன்று காரைக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம், அலகு குத்தி, அக்னி சட்டி, பரவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து முத்துமாரியம்மன் கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள பஜார் பள்ளிவாசல் வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து சென்றனர். பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க பஜார் பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் அடித்து பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவினர். இது மனிதநேயத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.