சுற்றுச்சூழல் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று ஊட்டி ஆலம்ஸ் அவுஸ் சாலையில் உபயோகம் இல்லாத வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கி வைத்திருந்த கடைக்கு 1 லட்சம் அபராதம் விதித்து கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.