நீலகிரி குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி இரவு ரோந்து பணியில் குந்தா வனச்சரகர் சீனிவாசன், குந்தா பிரிவு வனவர் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவர் சுரேஷ்குமார், கீழூர் காவல் சுற்று வனக்காப்பாளர், அப்துல் ரஹிமான், ஆறுமுகம் ஆகியோர் குந்தா தாலுக்கா எடக்காடு முதல் கண்ணேரி செல்லும் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரினை நிறுத்த முயன்றபோது காரில் இருந்தவர்கள் தப்பி சென்றனர், காரை துரத்தி சென்ற போது துப்பாக்கி வெடித்தது.
இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மூன்று பேர் தப்பிய நிலையில் கார் ஓட்டுனர் அப்துல் அமீன் (31) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இவரிடம் மாவட்ட வன அலுவலர் கௌதம் மேற்கொண்ட விசாரணையில் ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் கடமானை வேட்டையாட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பசீர் (36), ஷாபி வயது (31), சுனீர் வயது (39) ஆகியோருடன் வேட்டையாட வந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் அப்துல் அமீன் (31) கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்று, 2 தோட்டாக்கள், 4 காலிதோட்டாக்கள், கத்திகள், தலையில் மாட்டக்கூடிய டார்ச் லைட் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பிய மூன்று பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.