கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற பொதுக்குழு தலைவருமான செல்வ பெருந்தகை இன்று (19-ம் தேதி) ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: - தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் கட்டுமானத்தில் குளறுபடி இருப்பதாக ஏற்கனவே அரசின் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் மீனவர்களுடைய உயிர்பலி பிரச்சினை இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைப்போம். குமரி மாவட்டத்தில் ஐஆர்ஐ மணல் எடுப்பு சம்பந்தமாக மக்கள் போராட்டத்தை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
மக்களுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. மணல் எடுப்பது சம்பந்தமாக வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலை சம்பந்தமாக அதைச் சீரமைப்பதற்குப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விரைவில் முடிக்க இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.