மண்டைக்காடு அருகே வெட்டுமடையில் பாழடைந்த கட்டிடம் ஒன்று காணப்பட்டது. இந்த கட்டிடத்தை மீன் பதப்படுத்தும் நிலையமாக மாற்றி கடந்த மூன்று தினங்களுக்கு முன் கூண்டு வாகனத்தில் மீன்கள் அந்த பகுதியை கொண்டுவரப்பட்டது. அந்த மீன் கழிவு நீரை பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் விட்டதாக ஊர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சம்பவ இடத்திற்கு குளச்சல் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அனுமதி பெற்ற பின்பு ஆலை துவங்குவதாக கூறி ஆலைமூடப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஆக.,28) மீண்டும் 2 கூண்டு வாகனத்தில் மீன்களை ஏற்றி வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அருந்த கிராம நிர்வாக அலுவலர், கல்லுகூட்டம் பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், குளச்சல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்கள் உடனடியாக ஆலையை மூட வேண்டும் என கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது பேரூராட்சி நிர்வாகம் ஒரு வாகனத்தில் 25 ஆயிரம் வீதம் வீதம் இரண்டு வாகனங்களுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மாலை வரை போராட்டம் நடந்தது. தொடர்ந்து குளச்சல் எஸ்பி பிரவீன் கவுதம் பேரூராட்சி அலுவலகம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.