திருவட்டாறு அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (47) இவர் பொன்மனை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவ தினம் வின்சென்ட் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் அவர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் கரைக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த செங்கல் சூளை ஊழியர் ஒருவர் தேடி சென்றுள்ளார். அப்போது அங்கு வின்சென்ட் ஆற்றில் மூழ்கி கிடப்பதை பார்த்து, இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர் சைலஸ் ராஜன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் வின்சென்டை கரைசேர்த்து, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வின்சென்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரது மனைவி பிந்து என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.