சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு

69பார்த்தது
சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு
சூணாம்பேடு அருகே அகரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாகத்தில் புதர் மண்டி சீரழிந்ததால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் விருப்பம் காட்டவில்லை.

இதையடுத்து, கடந்த ஆண்டு 1. 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை செயல்படுத்தப் படாமல் பூட்டியே உள்ளதால், அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். "

தொடர்புடைய செய்தி