வெடால் ஏரி மதகு பழுது வீணாக வெளியேறும் தண்ணீர்

51பார்த்தது
வெடால் ஏரி மதகு பழுது வீணாக வெளியேறும் தண்ணீர்
"செய்யூர்: செய்யூர் அருகே வெடால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 1, 500 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது.

இந்த ஏரி பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அமந்தங்கரணை, வயலுார் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் குடியிருப்புப் பகுதி, வயல்வெளியில் இருந்து வெளியேறும் மழைநீர் வெடால் ஏரிக்கு வந்தடைகிறது.

வெடால் ஏரியில் இருந்து, இரண்டு மதகுகள் வாயிலாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரி, 50 ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படவில்லை. அதனால், ஏரியில் போதிய நீரை தேக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், ஏரியின் இரண்டு மதகுகள் பழுதடைந்து உள்ளதால், தொடர்ந்து மதகு வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால், அடுத்த போகம் பயிர் செய்யும்போது, ஏரியில் போதிய தண்ணீர் இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வெடால் ஏரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். "

தொடர்புடைய செய்தி