சம்ப்' தொட்டியில் மேஸ்திரி உடல் மீட்பு

55பார்த்தது
சம்ப்' தொட்டியில் மேஸ்திரி உடல் மீட்பு
திருப்பூர் மாவட்டம், கொட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 30, மேஸ்திரி. இவரது மனைவி ஜெனட், 28. தம்பதிக்கு தர்ஷினி, 11, தர்ஷன், 9, என இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின், சுங்குவார்சத்திரம் அடுத்து உள்ள பள்ளமொளச்சூரில்குடும்பத்துடன் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தங்கராஜிக்கு, ஐந்து ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

இதனால், கணவர் - மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கராஜ் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரதுமனைவி ஜெனட், மறுநாள் காலை அவரது வீட்டின் அருகில் உள்ள பராமரிப்பு இல்லாத வீட்டிற்கு சென்ற போது, திறந்த நிலையில் இருந்த கீழ்நிலை குடிநீர் தொட்டியில் தங்கராஜ் உடல் மிதந்திருந்ததை கண்டார்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மது போதையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி