கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் அருகே உள்ள பாலாறு பாலத்தின் மீது கடும் சேதம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
நாளை வாரவிடுமுறை என்பதாலும் புதன்கிழமை அன்று கிறிஸ்துமஸ் தின விழா என்பதாலும் அதிக அளவில் பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி இன்று காலை முதல் படையெடுத்து வருகின்றனர். பாலத்தின் மீது குண்டும் குழியுமாக அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக மாமண்டூர் பாலாறு பாலம் முதல் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்து நிற்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பள்ளங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் உள்ளாகி வருகின்றனர்.