ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்திய நிலை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 7ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 பேரிடம் இருந்து ரூ. 12 லட்சத்து 72 ஆயிரத்து 860 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ. 3.30 லட்சம் திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 9 லட்சத்து 42 ஆயிரத்து 860 ரூபாய் கருவூலத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதால் தேர்தல் பிரசாரகளம் மேலும் சூடுபிடிக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.