ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி, ஜெ. ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அதே பகுதியில் கடந்த 16 வருடமாக கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். 2 தகர செட்டுகள் அமைத்து கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கோழிக்குஞ்சுகள் பெரியதாக வளர்ந்ததும் அவற்றை விற்று விடுவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலசுப்பிரமணி 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி 2 தகர செட்டுகளில் அடைத்து வைத்திருந்தார். ஒரு செட்டில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 செட்டில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் இருந்து புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.