ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை கடைக்கு உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்து குட்காவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது மாதவகிருஷ்ணா வீதியில் சீதாராம் என்பவரது பீடா கடையில் சோதனை செய்த போது குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2கிலோ அளவிலான போதை வஸ்து பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் நீண்ட நாட்களாக போதை பொருட்களை சீதாராம் விற்பனை செய்து வருவது தெரிய வந்ததால் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வருவாய் துறையினர் உதவியுடன் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.