கோபி: அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு

4453பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கண்காணிப்பு நிலைக்குழுவினரை பகிரங்கமாக மிரட்டிய பாஜ வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி தலைவர் தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோகிராபருடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக்குழவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர்.

ஆனால் அவர் காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார். மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டினார். அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு. அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டல் தொணியில் பேசினார்.

அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறவே, ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார்.

அப்போது காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியபோது தொடர்ந்து காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர் எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு, மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா என்று கேள்ளியெழுப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக குன்னத்தூர் காவல் நிலையத்தில் தேர்தல் நிலைக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி