மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(56). இவர் சென்னையில் மாநகர காவல் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
மேலும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி நவீன் நகரில் உள்ளது.
பிரபு அவ்வப்போது விடுமுறை நாட்களில் மட்டும் குடும்பத்துடன் வந்து அங்கு தங்கி செல்வார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனைக்கண்ட அவரது பக்கத்து வீட்டின் கார் டிரைவர் ராஜா(35) என்பவர் இதுகுறித்து பிரபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் இன்ஸ்பெக்டர் பிரபு வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த வைர நெக்லஸ் மற்றும் ஒரு வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட 1 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.