கோவை அருகே உள்ள வடவள்ளி ஜி. சி. டி. நகர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி சந்தியா (34). இவர்கள் கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று விட்டனர். பிறகு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அலமாரி திறந்து கிடந்ததை கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த ஒன்றரை பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 16 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து சந்தியா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் வீட்டில் வேலை பார்த்த டிவிஎஸ் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (38) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ. 9 ஆயிரம் மீட்டனர்.