சென்னை: டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது - ஜி. கே. வாசன் கருத்து

66பார்த்தது
சென்னை: டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது - ஜி. கே. வாசன் கருத்து
தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற தொண்டர்கள் சிலர், தங்கள் கழுத்தில் மதுபாட்டில்களை தொங்கவிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் ஜி.கே. வாசன் பேசியதாவது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியிட்டாலும், தமிழகத்துக்கு தொகுதிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினையை, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி திமுக திசை திருப்ப பார்க்கிறது. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக மொழிப் பிரச்சினை நீடிக்கிறது. அடுத்தடுத்த பிரச்சினைகளை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசை திமுக குற்றம் சாட்டி வருகிறது. தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் ஊழல், இந்தியாவிலேயே எங்கும் நடக்காத ஊழலாக உள்ளது. இந்த ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது, தண்டனை மட்டும்தான் என ஜி.கே. வாசன் பேசினார்.

தொடர்புடைய செய்தி