தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கெனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பாஜக, அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமே மொழித் திணிப்புக்கு எதிராக திரண்டு எழுகிற சூழலில் மும்மொழி திட்டத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
அண்ணாமலை அறிவிப்பின் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. இத்தகைய அராஜக ஆணவப் போக்குக்கு தமிழக மக்கள் நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.