சென்னை: இளையராஜா விவகாரத்தை திரித்து பேசுவது வன்ம போக்கு - கஸ்தூரி

63பார்த்தது
இளையராஜா விவகாரத்தை திரித்து, பிரித்து பேசுகிற வன்முறை போக்கை கண்டிக்கிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடிகை கஸ்தூரி இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இளையராஜா என்பவர் ஒரு இசைக் கடவுள். கடவுளுக்கு கோயிலுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இளையராஜா எங்கு சென்றாலும், அவரே ஒரு கோயில், கடவுள்தான். ஆனால், அவரை கோயிலினுள் அனுமதிக்கவில்லை என்றொரு செய்தி வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் இந்த நாட்டில் எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார்கள்? காரணம், கருவறைக்குள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களும் போக முடியாது. 

அது இளையராஜா, கஸ்தூரி யாராக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியாது. அது பிராமணர்களாக இருந்தாலும் கருவறைக்குள் போகமுடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் போகமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அர்ச்சகர்கள் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியும். அவருக்கு மரியாதை செய்ய வேண்டும், அந்த இடத்தில் நிற்குமாறு கூறியுள்ளனர். இளையராஜா அங்கு நின்றுள்ளார். இவ்வளவுதான் அங்கே நடந்தது என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி