தியாகராய நகர் முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு சந்திப்பில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் எடுக்க வந்தனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர் திருநாவுக்கரசு குப்பைகளை எடுக்கையில், குப்பைத் தொட்டியின் அடியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலி தோட்டாக்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், தூய்மை கண்காணிப்பாளர் பாலாஜியை அழைத்துக் கொண்டு தி. நகர் காவல் உதவி ஆணையரைச் சந்தித்து இருவரும் தோட்டாக்களை ஒப்படைத்தனர். உதவி ஆணையாளர் மற்றும் மாம்பலம் ஆய்வாளர் குப்பை தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது தொடர்பாக விசாரணை செய்தனர்.
சிசிடிவி பதிவின் அடிப்படையிலும் மற்றும் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த பில்லில் இருந்த முகவரியின் அடிப்படையிலும் விசாரித்தபோது, தியாகராய நகர் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வந்து தோட்டாக்களை குப்பைத் தொட்டியில் போடப்பட்டது தெரியவந்தது.
அந்த வீட்டு முகவரிக்குச் சென்று விசாரித்த போது, கடந்த 11 வருடங்களாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (67) என்பவர் Movies Special Effect என்ற பெயரில் அங்கு அலுவலகம் நடத்தி வருவதாகவும், படப்பிடிப்பு சண்டை காட்சிகளுக்கு டம்மி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாடகைக்கு விடும் தொழிலை லைசென்ஸ் பெற்று நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது.