பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, துணை முதல்வரையும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். அவர்களும் இந்தப் பணிகளை துரிதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். வட சென்னையைப் பொறுத்தவரை இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டுக்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பணிகளை தான் இன்றைக்கு நான் ஆய்வு கொண்டேன் என்றார்.
காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனம் குறித்து தேடுதல் குழுவை ரத்து செய்து ஆளுநர் அறிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏன் என்றால், பெரியார் தான் எங்களுக்கு தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான். அதனால், அதை நாங்கள் பெரிதுப்படுத்தவும் தயாராக இல்லை. பொருட்படுத்தவும் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.