தமிழகத்தில் செப். 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

71பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9-ம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 3, 4 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வடக்கு ஒடிசா பகுதிகளில் நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி. மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி