தமிழகத்தில் இருந்து 5, 800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி தலைவர்
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5, 800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது, இந்தியா முழுவதும் நடப்பாண்டில் 1. 75 லட்சம் பேர் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். இதில் அரசின் ஹஜ் கமிட்டி சார்பாக 1. 40 லட்சம் பேரும், தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 38 ஆயிரம் பேரும் இந்த முறை புனித பயணம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 5, 800 பேர் தங்களது புனித ஹஜ் யாத்திரையை வரும் 26-ம் தேதி முதல் மேற்கொள்ள உள்ளனர். அதேபோல தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் 2, 800 பேரும் ஹஜ் பயணத்தை தமிழகத்தில் இருந்து மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும் என்று தெரிவித்தார்.