நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (டிச.16), தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரண்டு நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன்காரணமாக, டிச.18-ம் தேதி, வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில், அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும்.