ஆம்பூரில் எருது விடும் திருவிழாவை துவக்கி வைத்த எம்எல்ஏ

ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு கிராமத்தில் இன்று எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் முன்னிலையில் கிராம மக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரசு விதிமுறைகளை பின்பற்றி காளைகளுக்கும் எந்த துன்புறுத்தலும் இல்லாமல், மனித உயிர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விழாவை நடத்துவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இந்த எருது விடும் விழாவில் வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டாம்பள்ளி, மிட்டூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வாணியம்பாடி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம், உளிட்டா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீரி பாய்ந்து ஓடின. இதில் குறைவான நேரத்தில் இலக்கை சென்றடையும் காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம், இரண்டாவது பரிசாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டி, மூன்றாவது பரிசாக ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் என 50 பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி