ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் விவசாய நிலத்திற்குள் வரும் மான்களை வேட்டை நாய்கள் வைத்து மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மலையடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெங்கர் கோயில் பீட்டிற்கு உட்பட்ட விவசாய தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த தங்கராஜ்(30), முத்துகிருஷ்ணன்(38) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை சேர்ந்த சந்திரகுமார்(26), நாகராஜ்(34) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் ரெங்கர் கோயில் பீட்டில் வனப்பகுதிக்கு வெளியே பட்டா நிலத்தில் வைத்து நாய்கள் மூலம் மானை வேட்டையாடியுள்ளனர். இறந்த புள்ளிமானுக்கு 3 முதல் 4 வயது இருக்கும். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.