வேலூர் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் பகுதியில் எறும்புத்திண்ணையை விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்வதாக வேலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி வனத்துறையினர் மர்மநபர்களை தொடர்பு கொண்டு எறும்புத்திண்ணையை வாங்குவது போன்று பேசி உள்ளனர். மர்மநபர்கள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கணியம்பாடிக்கு வருமாறு கூறினர். அங்குள்ள வனப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மர்மநபர்கள் இருவரையும் மறைந்திருந்த வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை சோதனை செய்தபோது உயிருடன் சுமார் 5 கிலோ எடை கொண்ட எறும்புத்திண்ணி இருந்தது. விசாரணையில் அவர்கள் ஜமுனாமரத்தூர், நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 38), ராஜசெல்வம் (59) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த எறும்புத்திண்ணையையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.