மணப்பாறை பேருந்துகளில் ஏர் ஹாரண்கள் அகற்றம்

61பார்த்தது
மணப்பாறை பேருந்துகளில் ஏர் ஹாரண்கள் அகற்றம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஏர் ஹார்ன்) போக்குவரத்துப் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மணப்பாறை நகர் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய வகையில் ஒலிப்பான்களை பொருத்தி, அவைகளை ஒலித்து வருவதாகப் போலீசாருக்குப் புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் வடமலை தலைமையிலான போக்குவரத்துப் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அதிகமாக ஒலி எழுப்பிச் சென்ற இரு தனியார் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் வைத்து அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய வகையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். 

தற்போது திருச்சி மாநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலியெழுப்பும் ஏர் ஹார்ன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனை பகுதிகளில் அதிக ஒலி எழுப்பி போட்டி போட்டு பேருந்தை இயக்கி வருகின்றனர். எனவே திருச்சி மாநகரில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளிலும் உள்ள ஏர் ஹார்ன்களையும் அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

தொடர்புடைய செய்தி