ஓணம் பண்டிகை நாளை (செப்.,15) கொண்டாடப்பட உள்ளது மேலும் ஆவணி மாத கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் நாளை (செப்.,15) ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி பூச்சந்தைக்கு பேருரணி, ஓசனூத்து, அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 1,700 ரூபாய் வரையும் 400 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களுக்கு அணிவிக்கப்படும் ரோஜா இதழ் மாலை ரூபாய் 5,500 ல் இருந்து 6,000 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதே போன்று சென்டுபூ ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.