திருவாரூரில் ஆழி தேர் கட்டும் பணி தீவிரம்

84பார்த்தது
திருவாரூர் தியாகராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவில் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சி மார்ச் மாதம் 13ஆம் தேதி நடந்தது. மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. 

முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரமான ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறுகிறது. விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய நான்கு தேர்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். ஆழித்தேரை கட்டமைக்க வனத்துறை சார்பில் தரமான 2500 மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த மூங்கில்கள் அனைத்தும் மருதூர் கிராமத்தில் இருந்து எடுத்து வரப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மூங்கில்களை இணைக்கும் கட்டுக்களை கட்டுவதற்காக 250 கட்டு தேங்காய் நார் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சி பெல் நிறுவனம் மூலம் தேரின் நான்கு இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி