திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் கல்லாங்குத்து அரசு நிலத்தை கிராம பூர்வ குடி மக்களுக்கு வீட்டுமனையாக பிரித்து பட்டா வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய் மற்றும் காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அப்பகுதி மண் எடுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று வருகின்றனர்.
மேலும் போராட்டம் நடத்திய அப்பகுதி தலீத் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தனர்.
இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் எனவும் எச்சரிக்கை விட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.