அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் உடனடியாக பனப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாவட்ட துணைச் செயலாளர் சா. செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் து. கோவிந்தராஜ் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடன் தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் பணப் பலன்கள் வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் நியமனம் தனியார் மயம், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நாளை காலை10 மணிக்கு நிறைவு பெறும்.