தஞ்சாவூரில் பதுக்கப்பட்ட 1, 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

71பார்த்தது
தஞ்சாவூரில் பதுக்கப்பட்ட 1, 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூர் அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1, 200 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள வங்காரம்பேட்டையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் காவலர்கள் சனிக்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சைக்கிளில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டையைக் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

அவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது, அப்பகுதியிலுள்ள வீட்டின் பின்புறம் 1, 200 கிலோ ரேஷன் அரிசியை 24 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், இவற்றை தஞ்சாவூர் கரந்தை, பள்ளியக்ரஹாரம் பகுதிகளில் மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணை, இட்லி மாவு அரைப்பவர்களிடம் அதிக விலைக்கு விற்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக தஞ்சாவூர் அருகே மாத்தூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் தீபக்கை (23) காவல் துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி