சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 45), விவசாயி. இவருடைய தோட்டத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு வாய் பேச முடியாத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான 15 வயது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட வீரப்பன், கடந்த சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு தூக்கிச்சென்று பலமுறை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிப்பிற்கு உள்ளான சிறுமி வீட்டில் மயங்கி கிடந்த நிலையில் அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும் இது குறித்து அந்த சிறுமியின் பாட்டி சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பந்தபட்ட சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கொடூர செயலுக்கு காரணமான விவசாயி வீரப்பன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த வீரப்பன் தலைமறைவான நிலையில் அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.