சேலம் மாவட்டம் மடத்தூர் தீப்பாஞ்சம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தீர்த்த குட ஊர்வலம் தீப்பாஞ்சம்மன் கோவில் முன் உள்ள யாகசாலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடந்த கணபதிஹோமம், நாடி சந்தானம், பூர்ணாகுதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தது.
நேற்று தீப்பாஞ்சம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தீபாஞ்சம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் தீப்பாஞ்சம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவருமான கரட்டூர் மணி தலைமையிலான நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.