பரமக்குடியில் உள்ள அரசு கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக காட்டுபரமக்குடி கிராம மக்கள் கோவிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலாகும். அதேபோல் காட்டுபரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோவிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் இக்கோவிலின் அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோயிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.
இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் இன்று கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோசமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து காட்டுப்பரமக்குடி கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.