அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

82பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் மின்சார பணியாளராக பணியாற்றி வருபவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த நவீன் குமார் மற்றும் கண்ணன். இருவரும் அதே நூற்பாலையின் விடுதியில் தங்கிக் கொண்டு பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று கண்ணனின் தாத்தா குழந்தைவேல் என்பவர் உயிரிழந்ததை அடுத்து, கண்ணன் ஊருக்கு செல்வதற்காக நூற்பாலையில் பணிபுரியும் அவரது நண்பர் ராகுல் காந்தி என்பவரின் இரண்டு சக்கர வாகனத்தை வாங்கி, அதனை ஓட்டிக்கொண்டு குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியான அருவங்காடு பேருந்து நிறுத்த பகுதி வந்து கொண்டிருந்த பொழுது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நவீன்குமார் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கண்ணன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நவீன் குமாரின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி