மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி இன்று(டிச. 31) காலை பகல் பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டதுடன் விழா தொடங்கியது. பின்னர் கோயில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல மேளதாளம் முழங்க சகல பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி அங்குள்ள கருடாழ்வார் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இந்த திருவிழா வருகிற ஜன. 9-ம் தேதி வரை நடைபெறும். ஜன. 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடைபெற உள்ளது. அதன் பிறகு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. ஜன. 19-ம் தேதி இந்த விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்காடாஜலம், துணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, ரவிக்குமார் மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.