மதுரை மாவட்டம் முழுவதிலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீல்சேருடன் பேருந்தில் பயணிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மேலூரில் இருந்து பெரியார் பேருந்துநிலையம் செல்லும்TN58N2809 என்ற பதிவெண் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்து தமுக்கம் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
அப்போது பின்னால் உள்ள வாசல்வழியாக ஏறுமாறு கூறிய நிலையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீல் சேருடன் சென்றபோது திடீரென பேருந்தை நிறுத்தாமல் எடுத்து சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரம் என்பதால் அவரது நண்பர்களும் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் நிற்கும் போது ஓட்டுனரும் நடத்துனரும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரை ஏமாற்றிவிட்டு பேருந்தை எடுத்து சென்று விட்டதாகவும் , எனவே இது போன்று மாற்றுத்திறனாளிகளை சிரமத்திற்கு உள்ளாகும் ஓட்டுநர் நடத்துனர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.