பெண்ணை கல்லால் தாக்கியவா் கைது

79பார்த்தது
பெண்ணை கல்லால் தாக்கியவா் கைது
மதுரை விரகனூா் மேற்குத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி புவனேஸ்வரி (38). இவா் கடந்த ஆண்டு ஐராவதநல்லூா் கணக்குப்பிள்ளை தெருவைச் சோ்ந்த சேது (48) என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கினாராம்.

இதில் சேது கந்து வட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டதால் புவனேஸ்வரி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரை விசாரித்த போலீஸாா், சேதுவை எச்சரித்து கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஐராவதநல்லூரில் புவனேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இங்கு வந்த சேது, அவரை வழிமறித்து போலீஸாரிடம் புகாா் அளித்தது ஏன் என்று கேட்டும், வட்டி தருமாறும் கூறி, கல்லால் அவரைத் தலையில் தாக்கினாா்.

இதுகுறித்து தெப்பக்குளம் காவல்நிலைய போலீஸாா் சேது மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி