மதுரை வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் (மார்ச். 26) வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தை திருப்பி செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் சமயநல்லூரைச் சேர்ந்த சூர்யா (23), கண்ணன் (23) என்றும் தெரிந்தது. அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது பெட்ரோல் டேங்க் கவரில் கத்தியும், அரிவாளும் இருந்தது.
இதுகுறித்து சூர்யா என்பவரிடம் விசாரணை செய்ததில் கடந்த 25ம் தேதி இருவரும் சமயநல்லூரை சேர்ந்த சரண் என்பவர் வாடிப்பட்டி கோர்ட்டுக்கு வாய்தாவுக்கு வந்துள்ளதாகவும் சரணை கோர்ட் வாசலில் வைத்து வெட்டி கொலை செய்ய வந்தபோது போலீசார் அதிகம் இருந்ததால் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு திரும்பி சென்றதாகவும், மீண்டும் இன்று கோர்ட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்து அதனால் வந்ததாகவும் தெரிவித்தனர்.
அதனால் சூர்யா, கண்ணன் இருவரையும் கைது செய்த வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.