கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதி சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணியன் இளைய மகன் அருண் 21. இவர் தொட்டியம் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
இவரை நேற்று இரவில் இருந்து காணவில்லை என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அருகே உள்ள வெள்ளைச்சாமி என்பவர் பாசன கிணற்றிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவரது காலணிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது அருண் கை, கால்களை கட்டிய நிலையில் சடலமாக உடலை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் அருண் சடலத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இறுதி ஆண்டு இன்ஜினியரிங் பயிலும் மாணவன் கை கால்களை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.