மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயங்குழி பகுதி சேர்ந்தவர் சுபாஷினி (40) இவர் சம்பவ தினம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க புறப்பட்டார். இதற்காக பஸ்ஸில் அவர் பயணம் செய்யும்போது, அவர் அருகில் இருந்த ஒரு பெண் அவரது பர்சை திருடிவிட்டு சென்றுள்ளார். அதில் ரூபாய் ஆயிரத்து 200 மற்றும் இரண்டு செல்போன்கள், ரேஷன் கார்டு போன்றவை இருந்துள்ளன. சுபாஷினி பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதை அடுத்து நேற்று மீண்டும் சுபாஷினி அதே ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது பர்ஸை திருடிய அதே பெண் அந்த பஸ் நிலையத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார். உடனே சுபாஷினி அங்கிருந்து தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
இதை அடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார்ந்த விசாரித்தபோது அவர் பர்சை திருடியவர் என்பதும், கன்னியாகுமரியை சேர்ந்த சக்தி என்பவரது மனைவி தேவி (30) எனவும் தெரிய வந்தது. ஆனால் முகவரியில் சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.