கொல்லங்கோடு அருகே புதுவல்புத்தன் வீடு பகுதி சேர்ந்தவர் அனிஷ் (37). இவரது மனைவி தீபா (32) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அனிஷ் மது அருந்திவிட்டு வந்து மனைவியை தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று மாலை தீபா தனது சகோதரி வீட்டில் சென்று இருந்தார். அப்போது அங்கு சென்று அனிஷ் மனைவியை தகாத வார்த்தைகள் பேசி தாக்க முயன்றுள்ளார்.
இதை சகோதரியின் கணவர் ராஜேஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த அனிஷ் தான் கையில் வைத்திருந்த தடியால் ராஜேஷை தாக்கி காயப்படுத்தியுள்ளார். மேலும் சண்டையை விலக்கி விட வந்த தீபாவின் அண்ணன் மகன் வினு என்பவரின் கையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். காயமடைந்த ராஜேஷ், வினு ஆகிய இரண்டு பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் அனிஷ் மீது இன்று வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.