செங்கை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.
இதில், மான்கள், முயல், மயில்கள், உடும்பு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. வனத்துறை சார்பில், முந்திரி, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் இந்த பகுதிகளின் மண் வளத்திற்கு ஏற்ற நாவல், புங்கை உள்ளிட்ட மர வகைகள் நடப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு வார காலமாக, இந்த காடுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள காய்ந்த சருகுகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச் செல்வதால், அடிக்கடி காடுகள் பற்றி எரிகின்றன.
குறிப்பாக, பரனுார், கீழக்கரணை பகுதியில், திருச்சி - தேசிய நெடுஞ்சாலை ஓரம் காய்ந்த புல்கள் தீப்பற்றி எரிந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கடம்பூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், காடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிகின்றன.
இவ்வாறு காடுகளில் எரியும் தீயை, மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் சென்று அணைக்கின்றனர்.
காடுகள் என்பதால் பெரும்பாலான பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல பாதைகள் இருக்காது. இவ்வாறு தீ வைக்கும் நபர்கள் விளையாட்டாக நினைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.