செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சோகண்டி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 77 பயனாளிகளுக்கு ரூ.34.74 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார்.
முன்னதாக வேளாண்துறை, குழந்தைகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை பார்வையிட்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பிறகு மகளிர் சுயஉதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், வேளாண்துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கியும், குடும்ப அட்டை, தையல் இயந்திரம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முதியோர்களுக்கு மருந்து பெட்டகம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்வில் செயலாளர் ஆட்சியர் நாராயண சர்மா, திருக்கழுக்குன்றம் வேளாண் ஆத்ம குழு தலைவர் வீ. தமிழ்மணி, ஒன்றிய சேர்மன் ஆர்.டி. அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ. பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே. ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.