233 சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பதவி உயர்வு

59பார்த்தது
233 சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பதவி உயர்வு
தமிழ்நாட்டில் 233 புதிய சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று ஐகோர்ட் (பொ) தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் கூறினார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கொடுமுடி, எழுமாத்தூர் மற்றும் பெருந்துறை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கோர்ட் கட்டிடங்களை சென்னை ஐகோர்ட் (பொ) தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றங்களையடுத்து ஈரோடு மாவட்டத்தில் மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையானது 41 ஆக உயர்ந்துள்ளது.

புதிய நீதிமன்றங்கள் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பில்டிங் கமிட்டி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நீதியை நியாயமாகவும், விரைவாகவும் வழங்க முடியும். வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம்.

பல நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஏராளமான வழக்குகள் தேங்கி கிடக்கின்ற காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். நாணயத்தின் இருபக்கம் போல நீதிபதிகளும், வழக்கறிஞர்களும். வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க முடியும். சில வழக்குகள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளது.

இதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றங்கள் பழைய வழக்குகளை விரைந்து முடித்து நீதித்துறை நம்பிக்கையை நிலைநாட்டுவதன் மூலம் பொதுமக்களுக்கு நியாயமான தீர்ப்புகள் வழங்கவும் உதவும். நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்ற செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும்.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு கோர்ட் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமும், அரசும் எடுத்து வருகின்றது. வீடியோ கான்பிரஸ், இ பைலிங் தொழில்நுட்பங்களால் கோர்ட் நேரம் மிச்சமாவதோடு, வழக்காடிகளுக்கு உரிய காலத்தில் தீர்ப்பு பெற்றுத்தர முடியும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 300 புதிய சிவில் நீதிபதிகளுக்கு பரிந்துரை செய்தது.

இதில் 233 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதனால் சீனியார்ட்டி அடிப்படையில் பல நீதிபதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இவ்வாறு பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி